FEATUREDLatestஅறிவியல்

பல்லண்டங்கள் Multiverses

Spread the love

பேரண்டம் பற்றிச் சொல்லி ரொம்ப நாளாச்சு.

பிக்பாங் பெருவெடிப்புக் கோட்பாட்டினால் தனியொரு பேரண்டம் தோன்றியது என்னும் கருத்து, கொஞ்சம் கொஞ்சம் மாறுபாட்டை நோக்கிச் செல்கிறது. பல பேரண்டங்கள் (பல்லண்டங்கள்) அடுத்தடுத்து, நீர்க்குமிழிகள்போல, முடிவிலி எண்ணிக்கையில் இருக்கின்றன என்னும் கருத்து ஏற்கனவே இருந்தது. ஆனால் இப்போது, அதிலும் சிறிய மாற்றுக் கருத்து உருவாகியிருக்கிறது.

இருள் ஆற்றல் (Dark energy), இருள் பொருள் (Dark matter) மற்றும் ஈர்ப்புவிசை ஆகிய மூன்று மாய சக்திகளையும் மேலும் மேலும் ஆராய்ந்தபோது கிடைத்த முடிவுகளினாலேயே, பல்லண்டக் கருதுகோள்கள் வலுவடைந்தும், மாறுபாடுகளைக் கொண்டும் புதிதாக உருவாயிருக்கின்றன. ஈர்ப்புவிசை, இழுத்துக் கொள்ளும் என்றுதான் இதுவரை நினைத்திருந்தோம். ஆனால், அந்த ஈர்ப்புவிசை நாம் நினைத்ததைவிட வினோதமாகச் செயல்படுகிறது. இருள் ஆற்றல், இருள் பொருள் இரண்டுமே, பேரண்டத்தின் ஈர்ப்புவிசைக்குக் காரணமானவை என்னும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இவற்றில் ஒன்று ஈர்ப்பது. இன்னொன்று தள்ளுவது. இருள் ஆற்றல் ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தள்ளவும், இருள் பொருள் ஒன்றையொன்று ஈர்க்கவும் செய்கின்றன. அதனால், ஈர்ப்புவிசை என்பது இழுப்பதோடு மட்டும் நின்றுவிடும் விசையல்ல, கூடவே தள்ளும் விசையும்தான் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அதனாலேயே, ஐன்ஸ்டைனின் ‘ஒருங்கமைவுக் கோட்பாடு (Theory of everything) இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

விசயம் இத்துடன் முடிந்து போஜவில்லை.
மேலே சொன்ன பல்லண்டக் கோட்பாட்ட்டில் மாற்றம் இருக்கிறது என்று சொன்னேனல்லவா? அது இப்படி இருக்கலாமெனக் கருதுகிறார்கள். நாம் வாழும் பேரண்டம் முதல், அருகேயிருக்கும் ஒவ்வொரு பேரண்டமும் முடிவிலியான பருமனைக்கொண்ட பேரண்டங்கள்தான். ஒவ்வொன்றும் தனித்தனியாக திறந்த வெளிபோல முடிவிலிப் பருமனுடன் விரிந்திருக்கின்றன. அருகருகே இருக்கும் நீர்க் குமிழிகளைப் போல இல்லை. முடிவேயில்லாத மாபெரும் அண்டமொன்றைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதனில் அனைத்துப் பல்லண்டங்களும் பக்கம் பக்கமாக அமைந்திருக்கின்றன. அதாவது, பூமியில் கண்டங்கள் ஒவ்வொன்றும் இருப்பதுபோல, அண்டங்களும் அருகருகே இருகின்றன. குமிழ்களாக அல்ல, வெளிகளாகவே. பூமியின் கண்டங்களைக் கடல் பிரிப்பது மாதிரி, அண்டங்களை, மகா அண்டத்தின் வெளி பிரித்து வைத்திருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு பேரண்டமும் தனித்தனியாக முடிவிலிப் பருமன் கொண்டவையே! சொல்வது புரிகிறதா? ஒரு முடிவிலிப் பருமனுள்ள மகா அண்டத்தினுள், முடிவிலிப் பருமனுடைய பல அண்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் நம்முடைய அண்டமும். சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

சரி, முடிவிக்குள் முடிவிகள் எப்படி இருக்க முடியும்? அதை இப்படிப் புரிந்துகொள்ளுங்கள். 1,23,4… என்று எண்ணிக்கொண்டு போனால், முடிவிலிவரை எண்ணலாமில்லையா? எண்கள் முடிவிலியானவை. ஆனால், 1 க்கும் 2 க்கும் இடையேயுள்ள எண்களைப் பாருங்கள். 1.1, 1.01, 1.001, 1.0001 …. இப்படியாக 2 வரும்வரை முடிவிலியான தசம எண்கள் இருக்கின்றன அல்லவா? 1 க்கும் 2 க்கும் இடையேகூடப் பல முடிவிலி எண்கள் இருக்கின்றன. அதுபோல ஒவ்வொரு எண்ணுக்குமிடையில் முடிவிலி எண்கள் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்த்து, முழுமையான முடிவிலி எண்களாகவும் இருக்கின்றன. முடிவிலிக்குள் பல முடிவிலிகள்.

பேரண்டம் பிரமாண்டமானது. பிரமிக்க வைப்பது. ஒரு பேரண்டத்தை ஒரு கடவுள் உருவாக்கியிருந்தாலும், எஞ்சியிருக்கும் பேரண்டங்களை உருவாக்க இன்னும் நிறையக் கடவுள்கள் தேவை.

ராஜ்சிவா

Leave a Reply