FEATUREDHealthNewsஅறிவியல்

டிப்தீரியாவின் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மீள் வருகை

Spread the love

டிப்தீரியாவின் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மீள் வருகை

Dr.ஃபரூக் அப்துல்லா,MBBS.,(M.D.,)
சிவகங்கை

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் அவர்கள் வரலாற்றில் 1613 ஆம் வருடத்தை பற்றி கேட்டால்

அதிர்ச்சியுடன் ஒரு விசயத்தை பகிர்வார்கள்..

அரக்கண் போல ஒரு நோய் பரவி குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொத்து கொத்தாக லட்சக்கணக்கில் காவு வாங்கி சென்றதாக பதிவு செய்துள்ளனர்

அந்த வருடத்திற்கு
“கழுத்து நெறி வருடம்(year of strangulation) என்றே பெயர் வைத்துள்ளனர்..
(el año de los garrotillos)

காரணம்

நாம் இன்று கட்டுரையில் பேசப்போகும் நோயான
“டிப்தீரியா ( தொண்டை அடைப்பான்)”

ஊர் முழுவதும் டெங்கி , பன்றிக்காய்ச்சல் குறித்த கவனத்தில் இருக்கும் போது
நாம் மற்றொரு நோய் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க இருக்க வேண்டியுள்ளது

அந்த நோய்
“தொண்டை அடைப்பான்” எனும் டிப்தீரியா

கொரினி பேக்டீரியம் டிப்தீரியே எனும் பாக்டீரியா நுண்கிருமியால் தோற்றுவிக்கப்படும் இந்த நோயானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல் தும்மல் சளி மூலம் பரவும் தொற்று நோயாகும் (contagious disease)

40 ஆண்டுகளுக்கு பிறகு
தொண்டை அடைப்பான் நோய்க்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மதுரையில் இரு குழந்தைகள் பலியானது நினைவில் இருக்கலாம்.

டிப்தீரியா பற்றி இன்னும் ஆழமாக ஆராய்வோம் வாருங்கள்

இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகம் வந்த ஒரு நோயாகும். “வந்த” என்று நான் குறிப்பிடக்காரணம் , தேசிய தடுப்பூசி அட்டவணையில் டிப்தீரியாவுக்கு எதிரான தடுப்பூசி சேர்க்கப்பட்ட பின் கடந்த 40 ஆண்டுகளாக இந்த டிப்தீரியா நோய்க்கு மரணங்கள் தமிழகத்தில் நிகழவில்லை. ஆனால் இப்போது ஆங்காங்கே டிப்தீரியா நோய் கொள்ளை நோயாக உருமாறிவருவது உண்மை.

இந்த நோயின் அறிகுறிகள் பின்வருமாறு
1. தொண்டை வலி
2. காய்ச்சல்
3. தொண்டையை சுற்றி கழலை வீக்கம்
4. தொண்டையில் மெல்லிய படலம் தென்படும். (pseudo membrane)

இந்த நோய் வந்தால்
5 முதல் 10 சதவிகிதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
20 சதவிகிதத்திற்கு மேல் மரணத்தை ஏற்படுத்தும் நோயாகும்

தொண்டைக்குள் தோன்றும் இந்த தோல் போன்ற படலமானது குழந்தைக்கு சுவாச அடைப்பை உருவாக்கி மரணத்தை ஏற்படுத்தும். மேலும் அந்த கிருமி வெளியிடும் நச்சு ரத்தத்தில் கலந்தால் பல முக்கிய உறுப்புகளும் சேதமாகி மரணம் சம்பவிக்கும்.

இந்த நோய் எப்படி பரவும் ?

இருமும் போதும் தும்மும் போதும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்

இந்தியா போன்ற ஜனநெருக்கடி அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்த நோய் மிக எளிதாக பரவும் .

எப்படி காச நோய் பரவுகிறதோ அதைவிடவும் எளிதாக இந்த நோய் பரவும்

ஆனாலும் இந்த நோய் எப்படி கட்டுக்குள் இருக்கிறது?

தடுப்பூசியை தமிழகத்தில் சிறப்பாக அமல்படுத்தியதால் இந்த நோய் கடந்த நாற்பது வருடங்களாக இல்லை

கடந்த நாற்பது வருடங்களில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மருத்துவர்கள் இப்படி ஒரு நோயை கண்டிருக்க வாய்ப்பில்லை.

இப்போது இந்த நோய்க்கு இரண்டு மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படி இந்த நோய் தற்போது மீண்டும் தலைதூக்கியது??

தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் பேச்சைக் கேட்டு சரியாக தடுப்பூசி போடாததால் இப்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது

குழந்தை பிறந்த
45 ஆவது நாள்
75 வது நாள்
105 வது நாள்
இந்த மூன்று முறையும் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக போடப்படுகிறது

மீண்டும் குழந்தையின் ஒன்றரை வயதில் இதற்கான தடுப்பூசி போடப்படுகிறது

இந்த ஒன்றரை வயது வரை நன்றாக தடுப்பூசி கொடுக்கும் பல பெற்றோர்..

ஐந்து வயதில் இந்த நோய்க்கு தர வேண்டிய இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை மறந்து விடுகின்றனர்

இந்த ஐந்தாவது வயதில் போடப்பட வேண்டிய டிபிடி பூஸ்டர் ஊசி அதிமுக்கியம் வாய்ந்தது.

ஒன்றரை வயது வரை உள்ள டிப்தீரியா தடுப்பூசி கவரேஜ் 90 சதவிகிதத்திற்கும் மேல் இருப்பதால் இப்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழத்தைகளுக்கு பெரும்பாலும் இந்த நோய் வருவதில்லை.

ஐந்து வயது முடிந்ததும் போட வேண்டிய டிபிடி பூஸ்டர் ஊசியை மக்கள் சரியாக போடாமல் விடுவதால் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த டிப்தீரியா வருகிறது.

இந்த ஐந்து வயது தடுப்பூசியை பல மருத்துவர்களே தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க மறந்து விடும் சூழல் தான் நிலவுகிறது

மேலும் டிப்தீரியாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உடலில் குறைந்து கொண்டே செல்லும் என்பதால் கண்டிப்பாக ஐந்து வயது பூஸ்டர் ஊசி கட்டாயமாகிறது.

ஐந்து வயதில் போடப்படும் டிபிடி பூஸ்டர் கவரேஜ் தமிழகம் போன்ற படிப்பறிவில் சிறந்த மாநிலத்திலேயே மிகவும் குறைவாக இருப்பது மீண்டும் டிப்தீரியா கொள்ளை நோயாக உருவாக வழிவகை செய்து விடும்.

இப்போது ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு டிப்தீரியா அதிகம் வருவதால்.. நமது இந்திய அரசாங்கம்

பத்து வயது மற்றும் பதினாறு வயதில் போடப்படும் ரணஜன்னிக்கு எதிரான டெடானஸ் தடுப்பூசியுடன் டிப்தீரியா தடுப்பூசியையும் இணைத்து Td(Tetanus diphteria vaccine) என்ற பெயரில் போட ஆரம்பித்துள்ளது

ஆகவே, இந்த நோயை மேலும் தமிழகத்தில் பரவாமல் தடுக்கவும்
இந்த நோயால் மரணம் நிகழ்வதை தடுக்கவும்

உங்கள் குழந்தைகளுக்கு

ஒன்றரை மாதம்
இரண்டரை மாதம்
மூன்றரை மாதம்
ஒன்றரை வயது
ஐந்து வயது
பத்து வயது
பதினாறு வயது

ஆகிய வயதுகளில் தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் அனைத்து புதன் கிழமைகளில் கொடுத்து உங்கள் குழந்தைகளை காத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தடுப்பூசிகளை சரியாக போட விடாமல் இருந்த கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் டிப்தீரியா நோய்க்கு 2016இல் பள்ளி சிறார் சிறுமியர் சிலர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசியால் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்க்கு குழந்தைகள் பலியாவது வெட்கக்கேடானது.

இந்த நோய் பரவுவதை தடுப்பது சமூகத்திற்கு மிக முக்கியம். ஆகவே இந்த நோய் இருக்கும் அறிகுறிகள் தென்படின் எரித்ரோமைசின் மற்றும் பென்சிலின் கொடுத்தால் நன்றாக செயல்படும்.

தங்கள் குழந்தைகளின் இன்னுயிரை காப்பது உங்கள் கடமை.

Dr .ஃபரூக் அப்துல்லா,MBBS.,(M.D.,)
சிவகங்கை