FEATUREDGeneral

ஆண், பெண் கிணறு தெரியுமா

Spread the love

ஆண், பெண் கிணறு தெரியுமா?

இந்த தலைமுறைக்கு கிணற்றைப் பற்றித் தெரியாது. கிணற்றில் குளிப்பது, விளையாடுவது, கிணற்றுப் படிக்கட்டில் அமர்ந்து படிப்பது, கோபித்துக் கொண்டால் கிணற்றுப் படிக்கட்டில் அமர்ந்து அழுவது என கிராமங்களில் வாழ்ந்தவர்கள் கிணற்றின் நெருக்கத்தை நன்கு அனுபவித்தனர்.

” நினைவுகள் கசியும் இடம் கிணறு ” என்பார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

” தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு ” என திருவள்ளுவர், கேணி (கிணறுகளை) பற்றி எழுதியுள்ளார். அதாவது, மணலில் ஊற்று தோண்டிய அளவிற்கு நீர் ஊறும். அது போல மனிதருக்கு கற்ற அளவிற்கேற்ற அறிவு சுரக்கும். இதிலிருந்து
கிணறுகளுக்கு வயது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்பது மாற்றுக் கருத்து இல்லை. அணைகள், நீர்த் தேக்கங்கள் இல்லாத காலத்தில் நீர் ஆதாரமாக கிணறுகள் தோண்டி பயன்படுத்தினர்.

மனிதன் மற்றும் பிற உயிரினங்களில் இருபாலினம் உள்ளதைப் போல் ஆண் கிணறு, பெண் கிணறு என வகைப்படுத்தினர்.

விவசாய நிலத்தில் இருப்பது ஆண் கிணறு. அதை விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை விட அதிகம் நேசிப்பர். கயிற்றில் மாடுகளைப் பூட்டி, நாட்டுப்புற பாடல் பாடியவாறு கமலை மூலம் ‘சால் ‘ கிணற்றுக்குள் இறக்கி, நீறை வெளியே இறைப்பர். ஏற்றம் மூலம் மனிதர்களே நீர் இறைப்பர். கிணற்றில் நீர் மட்டம் உயர்வது. குறைவதை வைத்தே விவசாயம் செழிப்பா? அல்லது வறட்சியா? என முடிவு செய்வர்.
கிணறு வற்றி விட்டால் விவசாயி முடங்கிப் போய்விடுவான்.

வீட்டின் பின்புறம் இருப்பது பெண் கிணறு. கிணற்றடிதான் பெண்களின் அந்தரங்க வெளி. தண்ணீர் இறைத்து பாத்திரம் கழுவுதல், குளித்தல், துணி துவைத்தல் , ஏகாந்த மனநிலையில் பாடுதல், அழுதல் என பெண்களின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்ளும் தோழி கிணறு.

பஞ்சம் பிழைப்பிற்காக நல்லதங்காள் ஏழு பிள்ளைகளுடன் உடன் பிறந்த அண்ணன் நல்ல தம்பி வீட்டிற்கு வந்தாள். நல்ல தம்பியின் தம்பி மூளி அலங்காரியின் கொடுமையால் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிக் கொன்று, தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் நல்ல தங்காள். அதற்கு சாட்சியாக வத்ராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் ” நல்ல தங்காள் கிணறு ” உள்ளது. இதன் நீட்சியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டில் பெண்கள் கோபித்துக் கொண்டு தலைமறைவானால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வர். கிணறுகளின் நினைவாக, மதுரையில் தொட்டியன் கிணற்று சந்து, வாணியர் கிணற்று சந்து, நல்ல தண்ணீர் கிணற்று சந்து, என நன்றியுடன் தெருக்களுக்கு பெயர் சூட்டியுள்ளனர்.

மதுரை அருகே காதக் கிணறு, விருது நகர் மாவட்டம் மல்லாங்கிணறு, ராமநாதபுரம் கேணிக்கரை, கோவை கிணத்துக் கடவு என ஊர்களின் பெயரில் கிணறுகள் ஒட்டிக் கொண்டுள்ளன.

திருமணம் முடிந்ததும், புதுப்பெண்ணை உறவுக்கார பெண்கள் ஊர் பொதுக் கிணற்றிற்கு அழைத்துச் செல்வர்.
புதுமணப் பெண்ணின் இரு கைகளிலும் வெற்றிலையைக் கொடுத்து, அதே கிணற்றில் வாளியில் இறைத்த நீரை கைகளில் ஊற்றுவர்.பின்னர் வெற்றியை கிணற்றில் போடச் சொல்வர். கிணற்றில் வெற்றிலைகள் மிதக்கும் அதன் பிறகே புதுமணப்பெண் அக்கிணற்றில் தண்ணீர் இறைக்க அனுமதிக்கப்படுவர்.

ஊர் பொதுக் கிணற்றைச் சுற்றி வட்டமாக மேடை அமைத்திருப்பர். அதில் இரவு பஞ்சாயத்து கூட்டுவது, அரசியல் பேசுவது, தூங்குவது நடக்கும்.

வெளி உலகம் தெரியாத நபரை ” கிணத்துத் தவளையா இருக்கியேப்பா ” எனவும், ஒரு பணி அல்லது முயற்சியில் பாதி முடித்து முழுமையடையாவிடில் ” பாதி கிணறு தாண்டிட்ட, அப்புறம் என்னப்பா தயக்கம் ” என்பர்.

குடும்பச் சண்டையின் போது பெண்கள் அழுது கொண்டே, ” எங்கப்பன் போயும், போயும் இப்படி பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டானே ” என புலம்புவர்.

ஒரு சிறிய சம்பவம் பூதாகரமாக மாறும்போது, ” கிணறு வெட்ட பூதம் கெளம்பின கதையா இருக்கு ” என பழமொழிகள் நீளும்.

மழைநீரை சேமிக்க கிணறு போல் வேறு அமைப்பு கிடையாது.
மழை நீரை உள்வாங்கி, பின் மக்களுக்கே தருகிறது கிணறு.

போர்வெல் நீரை உறிஞ்சி வெளியே தள்ளுவதோடு சரி.

அளவு கோல் இன்றி, எந்த சாமானியனும் நிலத்தடி நீர் மட்டத்தை தெரிந்து கொள்ளலாம் கிணற்றில். நீர் இறைப்பது உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது.

” உனக்கென்னப்பா …
முப்பாட்டன் காலத்திலிருந்து கிணத்துதோட்டம் வெச்சிருக்க, கவலையில்ல.. ” என பெருமைத் தேடித்தந்தன கிணறுகள்.

” ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலே இருக்குது முன்னேற்றம் ” எனவும், ” ஏத்தமய்யா ஏத்தம்! எங்கப்பன், பாட்டன், பூட்டன் சொத்து இது ஏத்தம் ”
என சினிமா பாடல்கள் கிணறுகளின் பெருமையை ஒலித்தன. மின் மோட்டார்கள் வந்தவுடன் கிணற்று நீரை உறிஞ்சி வெளியே தள்ளின. இன்று கிணறுகளில் கமலை ஓசை, ஏற்றம், கப்பி, துலா சத்தம் அடங்கி விட்டன. கிணறுகள் பயனற்று பாழுங்கிணறுகள் ஆகிவிட்டன. பல கிணறுகள் இருந்த சுவடு தெரியாமல் மூடப்பட்டு கட்டடங்களாகி விட்டன.

* நாம் தொலைத்தது முப்பாட்டன் சொத்தான 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஈரமுள்ள கிணறுகளை மட்டுமல்ல, நம் நெஞ்சின் ஈரத்தையும்தான்!

#நன்றி.A.P.ஜனகன்.