FEATUREDLatestஇயற்கை மருத்துவம்

ஆடாதோடை எனும் இயற்கையின் பாடகி

Spread the love
ஆடாதோடை எனும் இயற்கையின் பாடகி:Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)
‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவ பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி

இனிமையாக

ும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ’இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.

’Adhatoda vasica’ என்பது இதன் தாவரவியல் பெயர். பசுமைமாறா புதர்ச்செடி வகையான ஆடாதோடையை வேலியோரங்களில் தாராளமாக காணமுடியும். கரும்பைப் போலவே ஆடாதோடையும் முக்கியமான வேலிப்பயிராக இருந்துள்ளது. மாவிலை, நுணாவிலை போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம். ஆடாதோடை இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடுதொடா’ என்ற காரணப்பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம். கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் இனிமையானது. கப நோய்களைப் போக்குவதற்கு இயற்கை வழங்கிய கசப்பான பிரசாதமாக ஆடாதோடையைப் பார்க்கலாம்.
ஆடாதோடை இலைகளில் இருக்கும் ‘Vasicine’ எனும் வேதிப்பொருளுக்கு, நுரையீரல் பாதையை விரிவடையச் செய்யும் (Bronchodilator) செய்கை உண்டு. நறுக்கிய ஆடாதோடை இலைகள் இரண்டு, மிளகுத் தூள் ஐந்து சிட்டிகை, கடுக்காய்த் தூள் ஐந்து சிட்டிகை… இவற்றை நீரிலிட்டு நன்றாக கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தினால், ஆஸ்துமா நோயாளர்களுக்கு உடனடியாக பலனைக் கொடுக்கும். குளிர்காலங்களில் நோய்த்தடுக்கும் உபாயமாகவும் இதனைப் பயன்படுத்தலாம். Vasicine, Vasicinol, Tannins, Saponins போன்றவை ஆடாதோடையில் இருக்கும் வேதிப்பொருட்கள்.
நவீன மருத்துவத்தில் சளி, இருமலைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் சிரப்களில் உள்ள மூலப்பொருள் ‘Bromhexine.’ இந்த கோழையகற்றி செய்கையுடைய Bromhexine, எதிலிருந்து பிரிதெடுக்கப்படுகிறது தெரியுமா? ஆடாதோடை இலைகளில் மறைந்திருக்கும் ’Vasicine’ எனும் வேதிப்பொருளிலிருந்து தான்! காசநோய் சார்ந்த மருத்துவ ஆய்வில், ஆடாதோடையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேதிப்பொருட்கள் சிறப்பாக வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.
கசப்புத் தன்மை மிகுந்திருப்பதால், ஆடாதோடை இலைகளை மணப்பாகு, குடிநீர் போன்ற வடிவங்களில் எடுத்துக் கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் சுரநோய்களுக்காக செய்யப்படும் குடிநீர் வகைகளில் ஆடாதோடை தவறாமல் சேர்க்கப்படுகிறது. விஷமுறிவு மருந்துகளிலும் இதன் பங்கு உள்ளது. ஆடாதோடை, அதிமதுரம், சீந்தில், ஏலம், மிளகு சேர்ந்த கலவையை தண்ணீரிலிட்டு நன்றாக காய்ச்சிப் பருக மூக்கில் நீர்வடிதல், தலைபாரம், சளி, வறட்டு இருமல் குணமாகும்.
செடியிலிருந்து நேரடியாக இலைகளை பறித்து பயன்படுத்தலாம். இல்லையெனில் இலைகளை உலரவைத்து, பொடித்து வைத்துக்கொண்டு அவசியம் ஏற்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆடாதோடையின் சிறு தண்டுகளை மண்ணில் சரிவாக புதைத்து பசுஞ்சாணத்தை முனையில் வைத்து தொடர்ந்து நீர் ஊற்றினாலே, மருத்துவப் பலன்களை கொடுக்கும் பெருஞ்செடியாக விரைவில் வளர்ந்துவிடும்.
கபநோய்களைத் தடுத்து, குரலுக்கு வலிமையைக்கொடுக்கும் ஆடாதோடை. ‘கணீர் கணீர்’ என்று வரும் இருமலைத் தடுத்து, ‘கணீர்’ என்ற குரல் வளத்தைக் கொடுக்கும் ஆடாதோடை, பசுமை குன்றாத ‘இயற்கையின் பாடகி!’

Leave a Reply