பறவைகள் தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளுமா
பறவைகளின் வாழ்விடம் இது தான் என்று எதை வைத்து தீர்மானிப்பது…
எனக்குள் இருக்கும் கேள்வி..
நான் அறிந்த வகையில், பறவை ஆர்வலர்கள் சொன்னபடி பறவைகள் எங்கே கூடு அமைத்து எதிர் கால சந்ததியை ஏற்படுத்திக்கொள்கிறதோ அது தான், அந்த இடம் தான் அவர்களுக்கான வாழ்விடம். சிறு குஞ்சுகள் பெரியதாகி உணவைத்தேடி பயணப்பட்டு வேறிடம் சென்று அதே இடத்திற்கு திரும்பிவிடும் என்பது பொதுவான கருத்து. ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி பறவைகள் தன் இருப்பிடத்தை கால சூழ்நிலையை பார்த்து தன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளுமா?
இங்கே ஒரு பறவையை பற்றிய விடயங்களை பார்ப்போம்..
வேட்டைக்கார ஆந்தை (Brown Hawk Owl – boobook)
இவர்களின் வாழ்விடம் – இமாலய பகுதி என்று குறிப்பிட்டுள்ளது.
இவர்களை மேற்கு தொடர்ச்சி பகுதியில் மற்றும் சில பல பகுதியில் பார்த்ததாக பதிவு உண்டு.
கிழக்கு தொடர்ச்சி மலை – ஏற்காடு மலை பகுதியில் 2018 ஏப்ரல் மாத வரை யாரும் பார்த்ததாக குறிப்போ பதிவோ இல்லை, 2018 ல் மே மாதத்தில் நான் பார்த்ததே முதல் பதிவு என்று சொல்கிறார்கள்(As per e-bird and birders from salem). விடயத்திற்கு வருவோம்.
மே மாதத்தில் நான் அவர்களை இணைசேர்க்கையில் இருந்த பொழுது பார்த்தது..பின் அவர்களை தொடர்ந்து கண்காணித்ததில் ஒரு பெரிய மரத்தில் சிறிய பொந்தில் கூடு அமைத்து முட்டையிட்டு ஆன் ஆந்தை கண்காணித்திக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தது .. தொடர்ந்து கண்காணித்ததில், மே மாத இறுதியில் ஆண் பெண் இருவரையும் ஒரே இடத்தில வெவ்வேறு கிளையில் அமர்ந்து அக்கூட்டை மட்டுமே பார்த்து கொண்டிருப்பதை பார்த்த நிகழ்வுகள் இன்னும் என் கண் முன்னே வந்து செல்கிறது. ஒரு சில நாட்கள் காலை முதல் மாலை வரை தன் இடம் நகராமல் ஒரே பார்வை தன்னுடைய கூட்டை மட்டுமே பார்த்து கொண்டிருப்புத்தை பார்க்கையில் மிகவும் வியப்பாக இருந்தது.. பின் நாட்கள் செல்ல செல்ல அடுத்த தலை முறை சிறிய பறவையை பார்க்கையில் அவ்வளவு ஆனந்தம்..எத்தனை முட்டை இட்டது என்று தெரியாது ஆனால் ஒரே ஒரு குஞ்சு பறவை மட்டுமே வெளியே வந்தது. ஜூன் மாதம் முதல் வாரம் வரை பார்த்தேன், பின் இவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. பின் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கண்காணித்ததில் எங்கும் தென்படவில்லை.
அனால் மாதத்தில் ஒரு முறையாவது அவ்விடம் சென்று பார்ப்பது வழக்கமாக்கிக்கொண்டேன் மீண்டும் அவரைகளை பார்ப்போமா என்ற ஆவலுடன்.
மீண்டும் பார்த்தேன் இவ்வருடம்.. பிப்ரவரி மாதத்தில் அதே இடத்தில ஆனால் வேறு ஒரு மரத்தில் ஆண் மற்றும் பெண் ஒரே கிளையில். ஜூன் 2018 இல் பார்த்தது மீண்டும் இவ்வருடம் பிப்ரவரி பார்த்தது என் மனம் மிகவும் மகிழ்ந்தது. அனால் ஒரே ஒரு நாள் மட்டுமே பார்க்க முடிந்தது, அடுத்த நாள் சென்று பார்க்கையில் அவர்கள் அங்கே இல்லை.. எங்கே சென்றார்கள்?
இதுதானே அவர்களிடம் வாழ்விடமாக இருக்க வேண்டும். 2018 ஜூன் மாதத்தில் சென்றவர்கள் பின் இவ்வருடம் பிப்ரவரி மாதத்தில் வந்தார்கள், இத்தனை மாதம் எங்கே இருந்தார்கள் எங்கே சென்றார்கள், அவர்களுடைய வாழ்விடம் இவ்விடம் இல்லையா?