FEATUREDLatestNewsSocialmediaTOP STORIES

ராஜேந்திரன் புலிகளுக்குத் தலைவன்

Spread the love

மீன்சுருட்டி- ஜெயம்கொண்டான் சாலையில் பயணிக்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் அதிகபட்சமாக ஒரு பெரிய கோயிலும், இரண்டு தேநீர் கடைகளும், ஐம்பது வீடுகளும் கொண்ட “கங்கை கொண்ட சோழபுரம்” என்ற சிறிய கிராமத்தின் பெயர் பலகை நம் கண்ணில் தென்படும், நான் ஒவ்வொரு முறை அந்த ஊரை கடந்து செல்லும் போதெல்லாம் அந்த நகரின் அன்றைய கட்டமைப்பை கண்டு வியந்திருக்கிறேன், சோழர்கள் ஆட்சியில் அதிக வருடங்கள் தலைநகராக இருந்த ஊர் அது. அந்த ஊரை தலைநகராய் கொண்டு சுமார் 254 வருடங்கள் சோழர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், பல தேசங்களை தனக்கு கீழாக கொண்ட தலைநகர் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? எத்தனை அரண்மனைகள்? எத்தனை தெருக்கள்? எத்தனை அங்காடிகள்? எத்தனை படை வீரர்கள்? எத்தனை யானைகள்? எத்தனை குதிரைகள்? கண்களை மூடிக் கொண்டு கருப்பு வெள்ளை நிறத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன் அந்த சோழத் தலைநகரின் நிலையை கற்பனை செய்து பார்த்திருக்கிறேன், பிரம்மிப்பு!.

அகழ்வாய்வு செய்யும் போது அங்கு கிடைத்த கல்வெட்டைக் குறித்து திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கூறியது இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அந்த நகரில் ராஜேந்திர சோழன் மதில், உட்படை வீட்டு மதில், சோழ கேரளாந்தகன் திருவாயில், ராஜ ராஜன் பெருவழி, ராஜேந்திரன் பெருவழி, விளாம்புடையான் பெருவழி, கூடைஆழ்வன்யன் போன பெருவழி, வேம்புக்குடி வாசல், குலோத்துங்க சோழன் திருமதில், குலோத்துங்க சோழன் பெருவழி போன்ற எண்ணற்ற பெயர்களை தாங்கிய வீதிகளும், வாயில்களும், அரண்மனைகளும் நிறைந்த அற்புதமான தலைநகராக ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்துள்ளது இந்த கிராமம்!,

ஒரு சிறிய விஷயத்தை மனதில் நிலை நிறுத்துக் கொண்டு இதை யோசித்துப் பாருங்கள், நடனமும், நாட்டியமும், இசையும், கணிதமும், மருத்துவமும், விவசாயமும், வணிகமும் உச்சத்தை தொட்டிருந்த நேரம் அது, தஞ்சை பெரிய கோயிலை கட்டிய அதே சோழர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகர் இது, ஒரு கோயிலையே இத்தனை பிரம்மாண்டமாய் அமைத்தவர்கள், தாங்கள் புதியதாக குடியேரப்போகும் நகரை எப்படி வடிவமைத்திருப்பார்கள், நகரின் நடுவே கோயில் இருக்க வேண்டும், எங்கிருந்து பார்த்தாலும் அந்த பிரம்மாண்ட விமானம் தெரிய வேண்டும், யாருக்கு வீடு எங்கே ஒதுக்க வேண்டும்? தெருக்கள் எப்படி அமைய வேண்டும், போர் வீர்கள் எங்கே இருக்க வேண்டும்? அரண்மனை எந்த திசையில் இருக்க வேண்டும்? திடீரென படை எடுப்பு வந்தால் அதை சமாளிக்க படைகளை அந்த நகரில் எப்படி நிலைநிறுத்தி இருக்க வேண்டும்,யோசிக்க, யோசிக்க ஆவல் அதிகமாகின்றது.

நேஷனல் ஜியோகிராபிக் சானலில் “Mega Cities” நிகழ்ச்சியை காணும் போது ஏற்படும் அதே பிரம்மிப்பு!. அப்படி அமைக்கப்பட்ட அவர்களின் நகரில் திசைக்கு ஒன்றாக நகரின் எல்லையில் காவல் தெய்வங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது, அந்த தெய்வங்கள் அனைத்தும் சோழர்கள் கங்கை வரை போருக்கு சென்ற போது வழியில் கடந்து சென்ற ஊர்களில் இருந்து எல்லாம் கொண்டுவரப்பட்ட தெய்வங்கள் அனைத்தையும் ஒவ்வொரு திசையிலும் பிரத்திட்டை செய்திருக்கிறார்கள். இந்த தெய்வங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது, அடுத்த முறை கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் போது ஒவ்வொரு திசைக்கும் சென்று இந்த தெய்வங்களை காணுங்கள், இவை அனைத்தும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து வெற்றிச் சின்னங்களாக சோழர்களால் அன்றைக்கு கொண்டுவரப்பட்டவை.

கங்கைகொண்ட சோழபுரத்தின் வடக்கே “சளுப்பை” என்று இன்றைக்கு அழைக்கப்படும் ஊரில் (அன்று சாளுக்கிய குலநாசினி மண்டலம்) வட எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தின் தெற்கே வானதாராயண் குப்பத்தில்; வீர ரெட்டித் தெருவில், தென் திசை எல்லை தெய்வமாக சாளுக்கிய தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தின் கிழக்கே செங்கல் மேடு என்ற இடத்தில் கிழக்கு திசை எல்லை தெய்வமாக கலிங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலை உள்ளது.

பாலகுமாரன் அய்யாவோடு, திரு.கோமகன் தயவில் நான் அந்த சோழத் தலை நகரை வீதி வீதியாக சுற்றி வந்து வியந்திருக்கிறேன், இந்த வெற்றிச் சின்னங்களை தொட்டுத் தடவி பரவசமடைந்திருக்கிறேன், ஆங்காங்கே காணப்படும் இடிந்த சுவர்களும், அரண்மனை மண் மேடுகளும், இந்த வெற்றிச் சிலைகளையும் காணும் போது, அந்த அற்புதமான நாகரிகத்தின் அழிவைக் கண்டு கலங்காமல் இருக்க முடியவில்லை, இன்றைக்கு புற்கள் நிறைந்திருக்கும் அந்த கிராமம், அன்று புலிகள் நிறைந்த பெரிய நகரம்! அந்த நகருக்கு சொந்தக்காரன் ராஜேந்திரன்! அவன் தான் அந்த புலிகளுக்குத் தலைவன்!.

– சசிதரன்