FEATUREDFemaleHealth

மார்பகப்புற்று

Spread the love

மார்பகப்புற்று!!

ஆராய்ச்சிக்காக மார்பகப் புற்றுநோய் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப்புற்றுதான் முதலிடத்தில் இருக்கிறது. இங்கிலாந்தில் மட்டும் 31% பேர் (மொத்த புற்றுநோய்களில்) அதாவது, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒருவருக்கு மார்பகப்புற்று இருப்பது கண்டறியப்படுகிறது. மார்பகப்புற்று என்பதோர் கடல்.

புற்றுநோயை, நோய்க்காரணிகளைக் கண்டறிந்து அதற்குரிய மருந்துகளை உருவாக்குவதென்பது மலையைக் குடைந்து எலியைப் பிடிப்பதற்கு ஒப்பானது. உலகிலிருக்கும் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட்டு புற்றுநோய் என்னும் பெருமலைகளைக் குடைந்து எலிகளைப் பிடிக்க முயல்கிறார்கள். அவ்வப்போது நம்பிக்கை தரும் வண்ணம் மருந்துகள் தயாராகின்றன. ஆனால், முழுமையான முறையில் குணமாக்க முடிவதில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக அரிதாக சிலர் குணமடைகிறார்கள்.

Cancer Research-UK வின் நோக்கமே 2025 க்குள் புற்றுநோய்களை முழுவதுமாக அழித்துவிடுவது என்பதல்ல. 2025 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய்களால் துன்புறுவோரின் வாழ்நாளை குறைந்தது 10 ஆண்டுகளாவது நீட்டிக்கப்படவேண்டும் என்பதுதான். வளர்ந்த UK விலேயே இந்த நிலை என்றால் நம் நாட்டில் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அறியேன்.

இதுவரை நானறிந்த (மார்பகப்புற்றுப் பற்றி) சில தகவல்களை இங்கே பகிர்கிறேன்…

1) மார்பகங்களில் வலி, வலியற்ற சிறு கட்டிகள்

2) மார்பகக்காம்புகள் சிவந்து அல்லது எப்போதும் இல்லாத வகையில் நிறம் மாறி, பால் அல்லாத திரவக்கசிவுகள்

3) மார்பக வீக்கம், தோள்பட்டையிலிருந்து தொடங்கி உள்மார்பு வரை வலி

4) மார்பகத்தைத் தற்செயலாகத் தொட்டால்கூட கூரிய வலி

5) எப்போதும் இல்லாத அளவுக்கு அல்லது தொடர்ந்து மூன்று நாள்களும் இரத்தப்போக்கு

6) தொடர்ந்து மார்பகங்களில் அரிப்பு அல்லது புண் உண்டாதல்

7) அக்குளில் புண்/கொப்புளம் தொடர்ந்து இருத்தல்

மேற்கண்டவற்றில் எந்த அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். ஆண்கள் தம் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இதுபற்றிப் பேசுங்கள்…மாதவிடாய் நாள்களில் தூய்மையைப் பேணுவதற்கு, படிக்காத பெண்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.

மார்பகப்புற்று பற்றிய நூலொன்றை எளிய தமிழில் Shahjahan R சார் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல். வீட்டிலேயே எளிய சோதனை மூலம் புற்றுநோயின் அறிகுறிகளை ஓரளவுக்கு உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்க இந்த நூல் உதவும். பல்வேறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூலும் கூட… எல்லோரும் வாங்கிப் பயன்பெற பரிந்துரைக்கிறேன். நூல் வேண்டுவோர் Naan Rajamagal அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது Shahjahan R சாரின் மார்பகப்புற்றுநோயின் பதிவுகளை வாசிக்கலாம்.

“மார்பகப்புற்று ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் வர வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் அலட்சியம் கூடாது.”

நேரமிருப்பின் இன்னும் பகிர்கிறேன்.

செ. அன்புச்செல்வன்
30/01/2019